உன் நினைவுகள்
உன் கண்
அசைவுகள் தான்
சாவி கொடுக்கின்றன
என் பேனைகளுக்கு
உன்னைப் பற்றி
கவி எழுத
என் கண்கள்
உன் நினைவுகளை
சேகரிக்கும் நூலகங்கள்
என் கவிதைகள்
உன்னை வாசிக்கும்
உதடுகள்
நிஜமாகவே
என்னை
கட்டியணைக்கிறாய்
உன் நிழல்கள்
என் மேல்
விழும்போது
பாகாகிக்
கொண்டிருக்கும்
என்
கவிதைகள்
பழுதாகும் முன்
அருந்திச் செல்
இரவு நேரமானதும்
உன்னைப் பற்றி எழுதிய
கவிதைகளை வாசிக்கிறேன்
கட்டியணைத்த படி
என்னோடு
தூங்குகிறாய் நீ
குயில்களிடம்
வாடகைக்கு வாங்கிய
சொற்கள் தான்
உன்னை பற்றி
எழுதிய
என் கவிதைகள்
வண்ணத்துப்
பூச்சிகளிடமிருந்து தான்
வண்ணம் பெறுகிறேன்
என் மதுக்கிண்ணம்
உன்னை
வரைய
என்
கவிதைகள்
ஒரு தேன் கிண்ணம்
உன் நினைவுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருப்பத்தால்
ஏ. எச். எம். றிழ்வான்