காத்திருக்கிறேன் காதலுடன் ...
குட்டிப் பூனையாய்
எட்டு வைக்கிறேன் மெல்ல
எட்டி விடலாமென்று - உன்
அன்பை
கொட்டும் மழையை அறியாது
பட்டம் கட்டும் சிறுவனாய்
பூட்டி வைக்கிறேன்-உன்
நினைவுகளை
விட்டுப் போனபின்
ஒட்டுப் போட வைத்திருக்கும்
பட்டு வேட்டியாய்-என்
இதயம்
கட்டுக் கட்டாய்
வெட்டி வைத்திருக்கும் கரும்பில்
சொட்டும் வெல்லமாய்-என்
உயிர்
எட்டாத தூரத்திலே
வட்டமிட்டு சுற்றித்திரிந்து
நோட்டமிடுகின்றேன் பருந்தாய்-நான்
உன்னை
தட்டு நிறைய குங்குமத்தோடு
வட்டப் பொட்டு வைத்து
மெட்டியிட காத்திருக்கிறேன்-என்
உண்மைக் காதலுடன்
ஏ. எச். எம். றிழ்வான்